Sunday, 25 September 2016

போர் தொடர்கிறது

நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா?இப்படியான இயேசுவை!தலை மயிர் மழிக்கப்பட்டு நிர்வாணமான நிலையில் ஒரு தொழுநோயாளி சாயலில்!எண்ணங்களில் இயேசு என்றென்றும் நீண்ட தலை முடியும்,தாடியுமாய் ஒட்டுத் துணியோடு சிலுவை மீது நிலைத்திருக்கிறார்.பாவத்தை ஒழிப்பது பற்றியும்,பரலோக பாதை குறித்தும் அவரது உருவம் விவரித்துக்கொண்டேயிருக்கிறது.நான் முதலில் சொன்ன இயேசு பாவத்தை அல்ல போரையும்,அழிவுகளையும் அர்த்தப்படுத்துகிறார் அகஸ்டா ருவா பஸ்டோஸின்(Augusto roa bastos) போர் தொடர்கிறது(Hijo De Hombre-Spanish)நாவலின் வழியாக..!

இலத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில் சர்வதிகாரி ஸ்ட்ரோஸ்னர் ஆட்சிக்காலத்தில் கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைகளையும்,கிளர்ச்சிகளையும் சபுகாய் என்ற கிராமத்தின் பின்னணியிலிருந்து விவரிக்கின்றது இந்நாவல்.1910 முதல் 1935 வரையிலான இருபத்தைந்து வருட காலகட்டத்தின் மீதே கதை குவிந்திருந்தாலும்,19-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் பின்னோக்கியும் செல்கிறது.அப்போதைய ஆட்சியாளரான டாக்டர்.ப்ரான்ஷியா(1814-1840) புரிந்த வன்கொடுமைகள் பற்றியும் விவரிக்கின்றது.

சிறுவன் மக்காரியோவின் தந்தை பிலார் சர்வதிகாரி ப்ரான்ஷியாவிடம் பணியாளனாக இருந்தார்.பிலார் ஒரு முலாட்டோ(நீக்ரோவுக்கும் வெள்ளை இனத்தவருக்கும் பிறந்தவர்).சிறுவன் மக்காரியோ ப்ரான்ஷியாவின் வீட்டிற்க்குள் சென்றபோது அங்கு யாரும் இல்லை.ப்ரான்ஷியா வேட்டைக்கு சென்றிருந்தார்.மேசையில் இருந்த தங்க நாணயத்தின் மீது ஆசைக்கொண்ட மக்காரியோ அதை கையில் எடுத்துப் பார்த்தான்.அவன் கை பொசுங்கிவிட்டது.பயந்து போன அவன் காசை மேசையின் மீது வைத்துவிட்டு ஓடிவிட்டான்.சற்றை நேரத்தில் அங்கு வந்த ப்ரான்ஷியா நாணயத்தைப் பார்க்கிறார்,சிறுவன் மக்காரியோவின் தீக்காயம்பட்ட கைகளை பார்க்கிறார்.நாணய திருட்டுக்கு தண்டனையாக தந்தையையே மகனுக்கு சவுக்கடிகள் கொடுக்க செய்கிறார்.இது கொடுங்கோன்மைக்கு சிறு உதாரணம்.

பல ஆண்டுகளுக்கு பிறகு,கிழவன் மக்காரியோ கிராமத்துக் குழந்தைகளுக்கு கேஸ்பர் மோராவின் கதையை சொல்கிறான்.தச்சனான கேஸ்பர் மோரா தொழுநோயால் பாதிக்கப்பட்டு காட்டில் தனியாக வாழும்போது செதுக்கியதே தலை மயிரற்ற நிர்வாண இயேசு சிலை.கிராம மக்கள் அதை கிராமத்தின் தேவாலயத்தில் வைக்க நினைக்கும்போது பாதிரிமார்கள் அந்த சிலை சாத்தானின் குறியீடு என தடுத்துவிட,இறுதியாக இடாபெ குன்றின் மீது நிறுத்தப்படுகிறது இயேசு சிலை. மயிறற்ற தலைக்கு தன் கூந்தலை அளிக்கிறாள் கிராமத்தாரால் வேசி என கூறப்பட்ட பெண்ணொருத்தி.இப்படியாக குன்றின் மேல் நின்ற இயேசு, அதற்கடுத்து தொடரும் சம்பவங்களின் அடையாளமாய் மாறிப்போகிறார்.

தன் குழந்தை அடிமையாக பிறக்கக்கூடாது என நினைக்கும் காஸியானோவும்,நாதியும் பண்ணையிலிருந்து தப்பிக்க செய்யும் முயற்சிகள் பெரும் அத்தியாயமாகவே தொடர்கிறது. போரினால் கிராமங்களை இழந்து அடிமையான மக்களையும்,அடிமைகளின் மீதான வன்முறைகளையும் காஸியானோ-நாதி தம்பதியரின் மூலம் வெளிக்கொணர்கிறார் பஸ்டோஸ். கிளர்ச்சியாளர்களையும்,அவர்கள் சர்வதிகார ஆட்சியினால் தண்டிக்கப்பட்ட முறைகளையும் அவர்கள் எழுதும் கடிதங்கள் மூலம் விவரிக்கின்றது அடுத்த அத்தியாயம்.ஒவ்வொரு அத்தியாயமும் முதலில் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாது தோன்றினாலும்,பின்னால் அத்தியாயங்களில் அவற்றிற்கிடையேயான தொடர்பு புலப்படுகிறது.பராகுவேயில் நிலவி வந்த வறுமையையும்,துரோகங்களையும்,மீண்டும் மீண்டும் ஏற்பட்ட துன்பங்களையும், ஏமாற்றங்களையும் பற்றி உண்மைகளை சொல்லக்கூடிய, அதே சமயம் விரக்தியுணர்வை உண்டாக்காத வகையில் பஸ்டோஸ் தனது நாவலை சரியான விதத்தில் உருவாக்கியிருக்கிறார்.

உலகின் பண்டைய வரலாறு போர்களின் மூலம் எழுதப்பட்டது என்பதை மறுக்கமுடியாது. ஆக்கிரமிப்பு போர்களை போலவே,அடக்குமுறைக்கு எதிரான போர்களும் வரலாற்று பக்கங்களை நிரப்பியுள்ளன.மனிதன் தனக்கென நிலையான வாழ்விடத்தை தேர்ந்தெடுத்து வாழத்தொடங்கியதிலிருந்து இன்றுவரை போர்கள் வரலாற்றில் நிறைய மாற்றம் செய்திருக்கின்றன. போர் மற்றும் போரின் விளைவுகள் குறித்து பதிவு செய்யும் வகையில் நிறைய திரைப்படங்கள்,நாவல்கள்,கவிதைகள்,ஓவியங்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. போரினால் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து உலகெங்கும் பரவி ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி காலத்தில் யூதர்களுக்கு அடுத்தப்படியாக அதிகளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட பூர்வக்குடிகளான ஜிப்சி(Zypsis) மக்களையும் வரலாறு அவ்வாறாக சில பகுதிகளில் குறித்துக்கொண்டது.வரலாறு அளித்த சிறு பகுதிகளில் நிரப்பிக்கொண்டவர்களில் பராகுவேயின் கதையும் ஒன்று.

இறுதியாக, போர் தொடர்கிறது நாவலை பற்றி எழுத்தாளர் ழான் ஃப்ராங்கோ எழுதியதிலிருந்து சில வரிகள்:
"எந்த நாட்டில் விவசாய வர்க்கத்தினர் தேசிய அளவில் அணித்திரட்ட முடியாத அளவுக்கு சிதறியும்,தனிமைப்படுத்தப்பட்டும் கிடக்கிறார்களோ, அந்த நாட்டில்”பூர்ஷ்வாக்களின் எழுச்சி” பற்றியோ,”புதிதாக வளர்ந்து வரும் வர்க்கங்களை” பற்றியோ பேசுவது மகவும் கடினம்."

No comments:

Post a Comment